Sunday, 18 July 2010 22:21
| < Prev | Next > |
|---|

உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில், ஆக்டோபஸ் கணித்த அணிகள் வெற்றி பெற்றது எப்படி என்று, கணித நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
தென் ஆப்ரிக்காவில் நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டியில், வெற்றி பெறப் போகும் அணி எது என்று ஜெர்மனியில் உள்ள மீன் அருங்காட்சியகத்தில் இருந்த பால் என்ற ஆக்டோபஸ் கணித்துச் சொன்னது.ஆக்டோபஸ் இருக்கும் தொட்டிக்குள் அன்று விளையாட இருந்த, இரண்டு அணிகளின் கொடியுடன் உள்ள இரண்டு சிறிய கண்ணாடி தொட்டியில் அதற்கு பிடித்தமான உணவு வைத்து இறக்கப்படும்.
ஆக்டோபஸ் எந்த தொட்டியில் உள்ள உணவை எடுக்கிறதோ அந்த அணி வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டது.இந்தப் போட்டியில், இறுதிப் போட்டி உட்பட எட்டு போட்டிகளும் ஆக்டோபஸ் கணிப்பின்படி முடிவுகள் அமைந்தன.
அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயினிடம் ஜெர்மனி தோற்கும் என்று பால் சொன்னது. அதன்படியே நடந்தது. "சொந்த நாட்டையே தோற்க வைத்த துரோகி அந்த ஆக்டோபஸ். அதை சூப் வைத்து குடிக்காமல் ஓயப்போவதில்லை' என ஜெர்மனியர், கொலைவெறியோடு அலைந்து கொண்டிருக்கின்றனர்.
ஸ்பெயின் தான் கோப்பையை வெல்லும் என்ற அதன் கணிப்பின்படி நடந்ததால், ஸ்பெயின் நாட்டுக்காரர்கள், ஆக்டோபசுக்கு கோவில் கட்டி கும்பிடாத குறையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.இதேபோன்று, மலேசியாவில், மணி என்ற கிளியும் கணிப்புகளை வெளியிட்டது. ஆனால், அதில் சில கணிப்புகள் மட்டுமே சரியாக இருந்தன. இறுதிப் போட்டியில், நெதர்லாந்து அணி தான் வெற்றி பெறும் என்று கிளி சொன்னது. ஆனால், வெற்றி பெற்றது என்னவோ ஆக்டோபஸ்தான்.
ஆக்டோபசின் ஜோதிடம் வெற்றிபெற்றது குறித்து, கணித நிபுணர்கள் கூறியதாவது: இந்த போட்டி குறித்து ஆக்டோபஸ் கணித்து சொன்னதில் ஜோதிடம் ஏதுமில்லை.எட்டு போட்டிகளை கணித்து சொல்லியுள்ளது. சீட்டாட்டத்தில், 52 கார்டுகளை விளையாடுபவர்களுக்கு பகிர்ந்து அளிக்கும்போது, அதில் வெற்றி பெறுபவர் மூன்று செட்களைச் சேர்க்க வேண்டும்.
இதற்காக 400க்கும் மேற்பட்ட தடவை கணக்கிடவேண்டும். இந்த முறையில், ஆக்டோபஸ் கணித்தது, அதிர்ஷ்டவசமாக சரியாக வந்துள்ளது. அதேபோன்று, ரூபாய் நாணயத்தை சுண்டும்போது, பூவோ, தலையோ தொடர்ந்து மூன்று தடவை வரும். ஆயிரம் தடவை சுண்டிவிடும் போது 50க்கு 50 வாய்ப்பு உள்ளது. இந்த முறையில், ஆக்டோபஸ் தேர்வு செய்தது சரியாக வந்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினார்.
உயிரியல் நிபுணர்கள் கூறியதாவது:கடல் வாழ் உயிரினங்களில், ஆக்டோபஸ் மிகவும் புத்திசாலித்தனமானது. எதையும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியது. அதற்கு நினைவாற்றலும் அதிகம். கண்ணாடி தொட்டியில், அதற்கு பிடித்தமான உணவுகளை வைத்துள்ளனர். அந்த ஈர்ப்பின் அடிப்படையில், அது தேர்ந்தெடுத்து உட்கார்ந்த பெட்டியை கணிப்பாக எடுத்துக் கொண்டனர்.
உணவோடு சேர்ந்து, அதன் கவனத்தை கவரும் வேறுபொருட்கள் அதில் வைக்கப்பட்டிருக்கலாம். அது சென்று உட்காரும் வகையிலும் பழக்கப்படுத்தப்பட்டிருக்கலாம். இதில், ஜோதிடம் ஏதும் இல்லை. குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதைதான் இதற்கும் பொருந்தும்.கணிப்பு சொன்ன ஆக்டோபசும், கிளியும் உலக அளவில் பிரபலம் அடைந்துவிட்டன. அதன் முதலாளிகளுக்கு நல்ல எதிர்காலம் கிடைத்துள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
Copyright © 2009 - 2012Alagankulam friends community Privacy Policy