‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘தர்மபத்தினி, ‘சோலைக் குயில்’, ‘சித்திரைப் பூக்கள்’, ‘அன்பே உன் வசம்’ ஆகியப் படங்களைத் தயாரித்த அழகன் தமிழ்மணி, ‘ஸ்ரீநாச்சியா அம்மன் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் சஞ்சய்ராம் இயக்கத்தில் ‘மீன்கொத்தி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
இப்படத்தில் அழகன் தமிழ்மணியின் மகன் அஜய் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார். கதாநாயகியாக தெலுங்கு நடிகை ஷோபனா நடிக்கிறார். இவர் தெலுங்கில் மூன்று படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார். ராதாரவி, அழகன் தமிழ்மணி இருவரும் முற்றிலும் மாறுபட்ட வேடங்களில் இப்படத்தில் நடிக்கிறார்கள். இவர்களுடன் கஞ்சா கருப்பு, ரமேஷ் கண்ணா, காதல் சுகுமார், நிகிதா ரவால், மாஸ்டர் சஞ்சய் ஆகியோர் நடிக்கிறார்கள்.
தினா இசையமைக்கும் இப்படத்தின் பின்னணி இசையை போஸ் சந்தோஷ் அமைக்கிறார். இவர் இசையமைப்பாளர் சந்திரபோஸின் மகன் ஆவார். பாடல்களை பிறைசூடன், இளையகம்பன், பரிணாமன், தனபாலன் ஆகியோர் எழுதுகிறார்கள். லியோ.டி ஒளிப்பதிவு செய்கிறார்.
ஒரு குடும்பத்தில் அண்ணன் – தம்பிக்கு இடையே சொத்து காரணமாக ஏற்படும் பகை அடுத்த தலை முறை அளவிற்கு பாதிக்கிறது என்பதே இப்படத்தின் கதை. ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படத்தை சஞ்சய்ராம் இயக்குகிறார்.
இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் படமாக்கப்பட்டிருக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்த நிலையில் தற்போது பின்னணி இசைச் சேர்ப்பு பணி நடைபெற்று வருகிறது.
ஆக்ஷன் கலந்த ஒரு அருமையான குடும்ப கதையாக உருவாகியிருக்கும் ‘மீன்கொத்தி’ படம் வரும் ஜூன் மாதம் உலகம் முழுவதும் வெளியாகிறது.
